![]() |
![]() |
“நான் வாயால் ஒப்புக் கொண்டாலே, ‘கம்’மென்று அடங்குவார்கள்!” -ராஜபக்ஷேViruvirupu, Monday 05 September 2011, 00:55 GMT
கொழும்பு, ஸ்ரீலங்கா: “ஈழப்போர்-4 முடிவடைந்தபோது (2009) நடைபெற்றதாக மேலைநாடுகள் குறிப்பிடும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் (மேலை நாடுகள்) எம்மிடமிருந்து எதிர்பார்ப்பது மிகச் சிறிய விஷயம்தான்” என்று கூறியிருக்கிறார் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான தென்னாசிய மாநாட்டில் பேசும்போதே அவர் இதைத் தெரிவித்துள்ளார். “மேலைநாடுகளால் கூறப்படுவது பெரிய குற்றச்சாட்டுகள் போல வெளியே தென்படலாம். ஆனால், அவர்கள் எம்மிடமிருந்து கோருவதெல்லாம், ‘வெறும் வாய் வார்த்தைகளில் மன்னிப்பு’ மாத்திரமே” என்றும் கூறியுள்ளார் அவர். அதாவது, “விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில், பொதுமக்களின் இழப்புகளும் தவிர்க்க முடியாதபடி ஏற்பட்டன” என்று ஸ்ரீலங்கா அரசு வாய் வார்த்தைகளில் அறிவித்தால், மேலை நாடுகள் அதைக் கேட்டு அமைதியாகி விடும் நிலை உள்ளது என்கிறார் அவர். இதை ஸ்ரீலங்கா ஜனாதிபதி எவ்வாறு கூறுகிறார்? “அமெரிக்காவும் மற்றைய மேலை நாடுகளும் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற பெயரில் நடாத்திய யுத்தத்தின்போது பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகளைவிட, ஸ்ரீலங்கா யுத்தத்தில் ஏற்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படும் அழிவுகள் குறைவானவை. ஈழப்போர்-4ல் நாம் உபயோகித்ததைவிட அதிக படை பலத்தையும், ஆயுத பலத்தையும், பண பலத்தையும் மேலைநாடுகள் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ நடவடிக்கைகளில் உபயோகித்துள்ளன. அத்துடன் நேரடி யுத்தத்தைவிட ஆளில்லாத உளவு விமானத் தாக்குதல்கள் மூலம் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அவற்றைவிட குறைந்தளவு அழிவுகளுடனேயே நாம் யுத்தத்தை ஜெயித்துள்ளோம் என்பது அவர்களுக்கு (மேலை நாடுகளுக்கு) தெரியும். அத்துடன், ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத நடவடிக்கைகளின் கொள்கை வகுப்பாளர்கள், மேலை நாடுகளில்தான் பாதுகாப்பாக வசிக்கிறார்கள். அவர்கள் அங்கிருப்பதும், மேலை நாடுகளுக்கு தெரியும். இதனால், போர்க்குற்றங்கள் விஷயத்தில் மேலை நாடுகள் எம்மிடம் (ஸ்ரீலங்காவிடம்) பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. ‘வெறும் வாய் வார்த்தைகளில் மன்னிப்பு’ மாத்திரமே அவர்களுக்கு போதுமானது” என்று பேசியுள்ளார் ஸ்ரீலங்கா ஜனாதிபதி. ஸ்ரீலங்கா மீதான மேலை நாடுகளின் குற்றச்சாட்டுகளை, இனிவரும் நாட்களில் அவர் இப்படித்தான் எதிர்கொள்ளப் போகின்றார் என்பது புரிகின்றது. இந்த உத்தி வேலை செய்யுமா? சர்வதேச ஊடகப் பிரசாரங்கள்தான், அதை முடிவு செய்யும். ஸ்ரீலங்கா விவகாரம், சர்வதேச ஊடகங்களின் பார்வையை வைத்தே, மேலை நாட்டு அரசுகளால் தீர்மானிக்கப் படுகின்றன. இவற்றை தவற விட்டீர்களா? LATEST ON VIRUNEWS
|
UPDATES
|